பேரையூர், ஜூன் 13: மதுரை மாவட்டத்தில் 11 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இங்கு கிராம நிர்வாக அலுவலர்களின் வருவாய் கணக்குகளை சரிபார்க்க ஆண்டு தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும். இந்த ஜமாபந்தி ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இந்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்ததால், நடத்த முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், நேற்று முதல் ஜமாபந்தி துவங்கியது. இதில் கிராம நிர்வாக அலுவலர்களின் விவசாய நிலம், தரிசு, புறம்போக்கு நிலம், பட்டா உரிமையாளர் உள்ளிட்ட 22 வகையான கணக்குகள் சரிபார்க்கப்படும். *பேரையூர் தாலுகா, சேடபட்டி பிர்காவிலுள்ள சேடபட்டி, ஜம்பலப்புரம், குப்பல்நத்தம், பூசலப்புரம், சின்னக்கட்டளை, ஆவல்சேரி, அதிகாரிபட்டி, செம்பரணி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜமாபதி நடைபெற்றது. கலெக்டர் சாந்தகுமார் (பொறுப்பு) பொதுமக்களிடம் பட்டாமாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 131 மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் ஆனந்தி, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் .உள்பட பலர் கலந்து கொண்டனர். *திருமங்கலம் தாலுகாவில் முத்திரைதாள் தனித்துணை ஆட்சியர் ரஜ்சித்குமார் தலைமையிலும், தாசில்தார் தனலட்சுமி முன்னிலையில் ஜமாபந்தி நடந்தது. கொக்குளம் உட்கோட்டத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். பட்டாமாறுதல், முதியோர் ஓய்வூதியம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் என 215 மனுக்கள் பெறப்பட்டன.