திருவெறும்பூர், ஜூன் 13: திருவெறும்பூர் அருகே திருவேங்கடநகர் பகுதி கூத்தைப்பார் பேரூராட்சி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து அந்த குப்பைகள் திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் செல்லும் சாலையில் பரவுவதுடன் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் மாசு ஏற்பட்டு வந்தது.இதனை தவிர்க்கும் பொருட்டு பெல் நிர்வாகம் கடந்த 2015 மற்றும் 16ம் நிதியாண்டில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் குப்பைத் தொட்டி ஒன்றை கட்டி கொடுத்து அதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டி வந்தனர். அப்படி சேரும் குப்பைகளை கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் வண்டி வைத்து அகற்றியது. இந்நிலையில் கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும், பேரூராட்சி சார்பில் வரும் துப்புரவு பணியாளர்களிடம் வீட்டில் சேரும் குப்பைகளை கொடுங்கள் என்று கூறியது. மேலும் அந்த குப்பை தொட்டி முன்பு இந்த குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டக்கூடாது. பேருராட்சி சார்பில் வரும் தள்ளுவண்டி பணியாளரிடம் குப்பைகளை கொடுக்க வேண்டும். மீறி இந்த இடத்தில் குப்பை கொட்டினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டுபவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருவதாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.