கீழக்கரை, ஜூன் 12: கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே கீழக்கரை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் 10க்கும் மேற்பட்ட தனியார் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் படிப்பதற்கு பணம் கட்ட வேண்டியுள்ளதால் சிலர் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில் அனைவரும் குழந்தைகளை சேர்க்கும்படி பலவகையில் அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில், கீழக்கரையில் மட்டும் அரசு நடுநிலை பள்ளியோ, மேல்நிலை பள்ளியோ இல்லாமல் உள்ளது. எனவே ஏழை,எளிய மக்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பை தொடருவதற்கு அரசு மேல்நிலை ப்பள்ளி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.