கறம்பக்குடி, ஜூன் 11: கறம்பக்குடி அருகே டீக்கடையில் மது விற்பதை தடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டரிடம் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேலத்தெரு பகுதியில் தளிகை விடுதி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்புதான் டீக்கடை தொடங்கினார்.
டீக்கடையின் பின் புறம் அனுமதி இன்றி மது பானம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் மதுவிற்கு அடிமை ஆகி விட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், மேலும் யாரும் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.