ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டம் கடந்த மூன்றாண்டுகளாக மழை பெய்யாத நிலையில் வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க தாலுகா தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கத்தார், நல்லதம்பி, நாகரத்தினம், சௌந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மயில்வாகணன் சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மழை பெய்யுமா என தெரியவில்லை. விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு தொகையும் வந்து சேரவில்லை. மழையில்லாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.