வேலூர், ஜூன் 11: வேலூர், சேலம், தர்மபுரி உட்பட 5 மாவட்டங்களுக்கு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து வேலூர் கருவூலத்திற்கு பல கோடி மதிப்பிலான முத்திரைத்தாள் நேற்று வந்தது. இவை 5 மாவட்டங்களுக்கும் விரைவில் பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் நிலங்கள், வீடுகள், உட்பட அசையா சொத்துக்கள், ஒப்பந்தங்கள் உட்பட ஆவணங்கள் முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இந்த முத்திரைத்தாள்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மத்திய அரசின் அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. இங்குதான் கரன்சி நோட்டுகளும் அச்சிடப்படுகிறது. இங்கு அச்சிடப்படும் முத்திரைத்தாள்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேவையான பலகோடி மதிப்பிலான முத்திரைத்தாள்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு நேற்று கன்டெய்னர் மூலமாக கொண்டுவரப்பட்டது.