நாமக்கல், ஜூன் 4: நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வடிவேல். இவர் நேற்று தனது மகன் நிஷாந்த்சக்தி, மகள் ரீமாசக்தி ஆகியோருடன் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். பின்னர், தலைமை ஆசிரியர் சாந்தியை சந்தித்து இருவரையும் அப்பள்ளியில் சேர்த்தார். ரீமாசக்தி 8ம் வகுப்பிலும், நிஷாந்த் சக்தி 6ம் வகுப்பிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் வடிவேல், இதற்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, அங்கும் அரசு பள்ளியிலேயே தனது 2 குழந்தைகளையும் சேர்த்து படிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே, தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் பல ஆண்டாக சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் பணியாற்றும் மாஜிஸ்திரேட் தனது 2 குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.