சென்னை, ஜூன் 4: கோயம்பேடு ராஜீவ்காந்தி நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சிவன் கோயில் பிரசித்தி பெற்றது. . இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம், அருகில் அமைந்துள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். பின்னர், போதையில் ரகளையில் ஈடுபடுவதுடன், கோயிலுக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான முறையில் நடந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, குடிமகன்கள் வீசி செல்லும் காலி மது பாட்டில்கள், உணவு மற்றும் பார்சல் கழிவுகள் கோயில் அருகே குவிந்து கிடப்பதால் பக்தர்கள் முகம் சுளித்தபடி வந்து செல்கின்றனர். இதுபற்றி பலமுறை காவல் துறையில் பக்தர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.