பள்ளிபாளயைம், மே 30: பள்ளிபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரில் உள்ள சாயப்பட்டறைகள், இரவு நேரத்தில் கழிவுநீரை வெளியேற்றுவதால் ஏற்படும் குளோரின் நச்சுப்புகையால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக, தாலுகா அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்தனர். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் அனுமதியற்ற சாயப்பட்டறைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல், நேரடியாக சாக்கடை கால்வாயில் கலக்கின்றனர். இதனால் காவிரியில் தண்ணீர் மாசடைகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி வருகின்றனர். ஆனாலும், முழுமையாக சாயப்பட்டறைகளை அகற்ற முடியவில்லை. இந்நிலையில், பள்ளிபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து, அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.