திருமலை, மே 30: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதால் ஆந்திர மக்களுக்கு இன்று முதல் நல்ல நாள் தான் என்று திருப்பதியில் நடிகை ரோஜா கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்த நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: பொய் வழக்குகளால் ஜெகன்மோகன் ரெட்டி கடும் இன்னலுக்கு உள்ளாகியிருந்தார். கடவுளின் ஆசிர்வாதத்தாலும் மக்களின் வாக்குகளாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் 151 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதைவிட மிகவும் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.