திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மே 28: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு,  சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 215 மனுக்கள் வரப்பெற்றன.

வரப்பெற்ற மனுக்களை தொடர்டைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆலங்குடி வட்டம், வெண்ணாவல்குடி கிராமம், கருவன் குடியிருப்பை சேர்ந்த  சுசீலா, சக்திவேல் ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்ததை தொடர்ந்து அவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பில் நிவாரண நிதி உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் குறைகளை போக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி,  மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமாரி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: