ராமநாதபுரம், மே 28: ராமேஸ்வரத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்களை மீட்டுத் தரக்கோரி அவர்களது குடும்பத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமேஸ்வரம் உண்டியல் குடி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி இந்திரா மற்றும் மார்க்கெட் தெருவை சேர்ந்த நாராயணன் மனைவி பேபிஅம்மாள் ஆகியோரது மகன்கள் கணேசன், ராம்குமார் இருவரும் தந்தை இல்லாத நிலையில் குடும்ப சூழ்நிலை கருதி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரையும் கொத்தடிமை போல நடத்துவதாக வாட்ஸ்அப் மூலமாக குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். துபாயிலிருந்து மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரின் பெற்றோர் பேபி அம்மாள், இந்திரா ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.