பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் திருடிய டேங்கர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த பானவேடு தோட்டம் கிராம பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியின்றி இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, இதை சென்னையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் பானவேடு தோட்டம் பகுதியில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. தற்போது 100 அடி தோண்டினால்கூட தண்ணீர் வருவதில்லை. தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சி லாரிகளில் எடுத்து செல்வதால் இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது.