நாகர்கோவில், மே 25 : நாகர்கோவிலில் வாலிபர் கொலையில் கஞ்சா விற்பனை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.நாகர்கோவில் கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (28). இவர் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நாகர்கோவில் வடசேரி பாலமோர் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சித்ரா இந்து மத நூல் நிலைய கலையரங்கம் வராண்டாவில் முகத்தில் காயங்களுடன் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது அருகில் கருங்கல் தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண் (48) என்பவர் படுகாயங்களுடன் கிடந்தார்.வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயங்களுடன் கிடந்த ஜாணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கும்பலாக சேர்ந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.