பெரம்பலூர், மே 25: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. சிலப்பதிகார காலத்தில் தவறான அரசநீதியால் கணவனை இழந்த ஆத்திரத்தில் மதுரையை எரித்தக் கண்ணகி, சுற்றித் திரிந்துவந்த நிலையில் சிறுவாச்சூரில் வந்துதங்கி இளைப்பாறியபோது சினம் தணிந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகவும், ஆதிசங்கரர் வழிபாடுசெய்ததும், ஊமையும், செவிடும் நீக்கும் சக்திநாயகியாய் நின்று அருளுவதும், மலடுநீக்கி மக்கட்பேறு அளிக்கும் வரப் பிரசாத அன்னையாய் சிறந்து நிற்பதும், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற வற்றின் இடர் அகற்றுவதுமான இனிய சக்திதெய்வமாய் விளங்கும் மதுரகாளியம்மன் குடி கொண்டுள்ள இந்தக்கோயிலின் திருத்தேரோட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதேபோல் நடப்பாண்டும் கடந்த 7-ம்தேதி இரவு 11மணிக்குத்தொடங்கி 8-ம்தேதிகாலை 10 மணிவரை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. அதனையடுத்து 14-ம்தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெரியசாமி மலையிலும், அதிகாலை மதுரகாளியம்மன் கோயிலிலும் காப்புகட்டுதல் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து 15-ம் தேதி சந்திமறித்தலும், 16-ம் தேதி குடிஅழைத்தலும், 17-ம் தேதி சிவவழிபாட்டுடன் அன்னவாகனத்தில் சாமி திருவீதியுலாவும்நடந்தது. மேலும்,18-ம் தேதி பெருமாள்வழிபாடும், 19-ம் தேதி மாரியம்மன் வழிபாடும், 20-ம் தேதிஅய்யனார்வழிபாடும், 21-ம் தேதி மலைவழிபாடும் நடத் தப்பட்டது.