திருப்பத்தூர், மே 25: முதல்வர் மற்றும் மின்வாரிய சேர்மனுக்கு புகார் கடிதம் அனுப்பியதால் ஆத்திரமடைந்த செயற்பொறியாளர் சக ஊழியரை தாக்கிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். உதவி கணக்கு அலுவலராக சிவாஜி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை செயற்பொறியாளர் கிருஷ்ணன் ‘நான் ஊழல் செய்வதாகவும், பொய் கணக்கு எழுதி வருவதாகவும் என் மீது நீ முதல்வர் மற்றும் மின்வாரிய சேர்மனுக்கு புகார் அனுப்புகிறாய் என்று கூறி சக ஊழியர்கள் மத்தியில் திடீரென சிவாஜியை சரமாரியாக தாக்கினாராம்.