சத்தியமங்கலம் அருகே பத்ரகாளி அம்மன் கோயில் குண்டம்

சத்தியமங்கலம், மே 23: சத்தியமங்கலம் அருகே பத்ரகாளி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சத்தியமங்கலம் அருகே ராஜன் நகர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்ட எரி கரும்பிற்கு நெருப்பு மூட்டுதல் நிகழ்வும், நேற்று அதிகாலையில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட 30 அடி நீள குண்டத்திற்கு கோயில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினார்.

பின்னர், விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.  நேற்று மதியம் ராஜன் நகர் முத்துமாரியம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜையும்  மாலை கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: