விளையாட்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

ராமநாதபுரம், மே 23:  ராமநாதபுரத்தில் விளையாட்டு ஆணையம் சார்பில் நடந்த கோடைகால விளையாட்டு சிறப்பு பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு உறைவிடப் பயிற்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்த பயிற்சியில் 250 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பயிற்சியின் நிறைவு நாள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: