ராமநாதபுரம், மே 23: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு காலையிலும், மழலையர், தொடக்கப் பள்ளிகளுக்கு பிற்பகலிலும் நடந்தது. ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளன. மே 31ம் தேதிக்குள் பள்ளிக்கான அங்கீகாரத்தை நேரடியாகவோ, ஆன்லைனிலோ புதுப்பிக்க பள்ளி முதல்வர்கள் தாளாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும். மே 31ம் தேதிக்கு பிறகு அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது.