அந்தியூர்,மே 22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையோரம் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா,ஹான்ஸ் ஆகியவை தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பர்கூர் தனிப்பிரிவு போலீசார் கர்நாடக மாநில எல்லை பகுதியான கர்கே கண்டி பாலாற்று பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் மூட்டை கணக்கில் இருந்தது தெரியவந்தது.
இதனை ஒட்டி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேணுகோபால் மகன் பிரபு(22) மற்றும் மாதேஸ்(30) ஆகிய இருவரை பர்கூர் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு பிக்கப் வேனையும் அதில் இருந்த ரூ 2 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.