சேதுபாவாசத்திரம், மே 21: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழையின்றியும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்காமலும் ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசனம் உட்பட அனைத்து பாசன பகுதியிலும் சாகுபடி நடக்கவில்லை. இந்தாண்டும் மேட்டூர் அணை நிரம்பவில்லை. சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது சிரமம் தான். 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளும், 200க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்களும் 4 ஆண்டுகளுக்கு மேலாக மழையின்றி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்ததால் நெய்வேலி காட்டாமணக்கு மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.