சேதுபாவாசத்திரம் கடைமடையில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம், மே 21: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழையின்றியும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்காமலும் ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசனம் உட்பட அனைத்து பாசன பகுதியிலும் சாகுபடி நடக்கவில்லை. இந்தாண்டும் மேட்டூர் அணை நிரம்பவில்லை. சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது சிரமம் தான். 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளும், 200க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்களும் 4 ஆண்டுகளுக்கு மேலாக மழையின்றி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்ததால் நெய்வேலி காட்டாமணக்கு மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

கடந்தாண்டு தூர்வாரப்படாமல் ஏரிகளை ஆழப்படுத்தும் நோக்கில் விவசாயிகள், ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் மண் எடுத்த ஏரிகளில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதற்குகாரணம் ஒழுங்குபடுத்தி மண் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் அங்கொரு இடம், இங்கொரு இடமாக மண் எடுத்துள்ளனர். எனவே இந்தாண்டு அதிர்ஷ்டவசமாக மழை பெய்தாலும் கூட தண்ணீர் தேங்க கூடிய நிலையில் ஏரிகள் இல்லை. ஏரிகளில் புதர்கள் மண்டி மண்மேடாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏரிகளில் தண்ணீர் தேங்க வேண்டும். எனவே தற்போதுள்ள கோடை பருவத்திலேயே ஏரி, குளங்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: