கும்பகோணம், மே 21: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு புதிய கொடிமரம் செய்வதற்காக 3 ஆண்டுகளுகாக மரம் அப்படியே கிடக்கிறது. எனவே விரைந்து கொடிமரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் உள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், 108 வைணவ தலங்களில் ரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலின் கொடிமரம் 100 ஆண்டுகள் பழமையானதால் சேதமடைந்தது. இதையடுத்து அங்கு புதிய கொடிமரம் அமைப்பதற்கு அறநிலையத்துறையால் முடிவு செய்யப்பட்டது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு உபயதாரர் மூலம் 70 அடி உயரத்துக்கு புதிய கொடிமரம் மலேசியாவிலிருந்து 2017ம் ஆண்டு தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கும்பகோணத்துக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. ரூ.25 லட்சம் மதிப்பிலான இந்த வேங்கை மரத்தை கொடிமரமாக தயார் செய்து 2017ம் ஆண்டு சித்திரை பெருவிழாவுக்குள் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.