பாடாலூர், மே 21: பாடாலூரிலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் பாடாலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கிய வணிக தலமாக விளங்கி வருகிறது. பாடாலூர் கிராமத்திலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலை முக்கிய இணைப்பு சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை வழியாக தான் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், சிறுவயலூர், மாவலிங்கை, குரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பாடாலூர் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிணற்று பாசன விவசாய நிலங்களும், மானாவாரி விவசாய நிலங்களும் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஓட்டி செல்கின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவையான அனைத்து இடுபொருள்களையும் எடுத்து செல்கின்றனர். விவசாய நிலங்களில் விளையும் தானியங்களையும் எடுத்துவர வேண்டும்.