நாகர்கோவில், மே 19: வெள்ளிச்சந்தை அருகே குளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் உடலை 3 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, அழகியநகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (36). ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வெள்ளிச்சந்தை காலனி பகுதியை சேர்ந்த வினோதினி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இளையராஜாவும், வினோதினியும் ஆசாரிப்பள்ளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், வினோதினியின் ஊரான வெள்ளிச்சந்தை காலனி பகுதிக்கே சென்று குடியேறினர்.இந்த நிலையில் கடந்த 15ம்தேதி வெள்ளிச்சந்தை அருகே உள்ள கண்ணமங்கலம் குளத்தில் இளையராஜா சடலமாக மீட்கப்பட்டார். கரை பகுதியில் அவரது பைக், துணிமணிகள் இருந்தன. அந்த துணிமணிகளுடன் ஒரு சிரிஞ்ச், மருந்து பாட்டில் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.