திருவாரூர், மே 19: நாகை எம்பி தொகுதிக்குட்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய 6 எம்எல்ஏ தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் ஆனந்த் பேசுகையில், வரும் 23ம் தேதி காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ள நிலையில் இந்த பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் காலை 6 மணிக்குள்ளாகவே மையத்திற்குள் இருக்க வேண்டும்.