திருச்சி, மே 17: திருச்சி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எலும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு உள்பட 16 வார்டுகள் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரே கட்டிடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் தீவிர மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கென கட்டிடம் கட்ட உலக வங்கி உதவியுடன் ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு 3 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் டிசம்பர் 30ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.