திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எண்ணெய் கடாயில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (30). இவர், தனது மனைவி மற்றும் 3 மகள்களை கோடை விடுமுறையை முன்னிட்டு, போளிவாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு, கடந்த 10ம் தேதி மாலை வீட்டில் கல் அடுப்பு வைத்து கடாயில் வடை சுட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது விளையாடிக்கொண்டு இருந்த 3வது மகள் பவித்ரா (4) எதிர்பாராத விதமாக கடாய் மீது விழுந்தார். இதில் கை, கால் மற்றும் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறினாள்.