பரமக்குடி, மே 16: பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையிலான வேகத்தடைகளால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையில் 27 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளது. இந்த சாலையில் தொழில் நுட்பக்கல்லூரி, கலை மற்றம் அறிவியல் கல்லூரிகள், மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால், அதிகளவில் கனரக வாகனங்கள் மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்கள் என தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரை சுமார் 15 இடங்களில் வேகத்தடைகள் உள்ளதால், பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓவ்வொரு ஊர்களின் நிறுத்தத்திலும் வேகத்தடைகளை அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். வேகத்தடைகள் அமைக்கும் போது வாகனத்தில் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒளிரும் போர்டுகளும், வேகத்தடை உள்ளது என்று தெரிவிக்கும் விதமாக வெள்ளை கோடுகளும் சாலையில் வரையப்படவேண்டும்.