திருமயம் கடைத்தெருவில் சாலையோரம் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் அவதி

திருமயம், மே 16: திருமயம் கடைதெருவில் சாலையோரம் கொப்பளித்து கொண்டு வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வளர்ந்து வரும் முக்கிய கிராமம். இங்கு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் திருமயம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் திருமயத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் பள்ளி கூடங்கள், தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளதால் திருமயம் சுற்றியுள்ள கிராம மக்களும் அதிகளவு வருவது வழக்கம். அதேநேரம் இங்குள்ள வீதிகளில் குப்பை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம் சரிவர நடைபெறுவது இல்லையென அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் திருமயம் தகர கொட்டகை எதிர்புறம் தனியார் வங்கி ஏடிஎம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையோரம் கடந்த சில மாதங்களாக கழிவுநீர், சாலையில் கொப்பளித்து வெளியேறுகிறது. இதை சரி செய்ய அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையில் கழிவுநீர் பல நாட்களாக தொடர்ந்து வெளியேறி வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே திருமயம் முக்கிய பகுதியில் சாலையோரம் வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு முறையான கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: