திருமயம், மே 16: திருமயம் கடைதெருவில் சாலையோரம் கொப்பளித்து கொண்டு வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வளர்ந்து வரும் முக்கிய கிராமம். இங்கு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் திருமயம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் திருமயத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் பள்ளி கூடங்கள், தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளதால் திருமயம் சுற்றியுள்ள கிராம மக்களும் அதிகளவு வருவது வழக்கம். அதேநேரம் இங்குள்ள வீதிகளில் குப்பை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம் சரிவர நடைபெறுவது இல்லையென அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.