தஞ்சை, மே 15: எங்களது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் நானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம். கருப்பையன் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை நிலம் வாங்குவதற்காக கோட்டைக்காட்டை சேர்ந்தவரிடம் கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.