குளச்சல், மே 14: குளச்சல் ஜேம்ஸ் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் மருத்துவமனை மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் செனிகா பிரேம்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி செவிலியர் சேவை குறித்த கண்காட்சி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படம் முன்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை நோயாளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் நர்சிங் பள்ளி முதல்வர் அனிஜா,நர்சிங் சூப்பிரண்ட் அனிதா மற்றும் நர்சிங் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.