கரூர், மே 10: கரூர் அருகே பழமை வாய்ந்த நிழற்குடையை பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர். இதில் தாகம் தணிக்க மண்பானையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நிழற்குடையில் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்ற போர்டும் தொங்கவிடப்பட்டுள்ளது. க.பரமத்தியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் பயணியர் நிழற்குடை நீண்டகாலமாக இருந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மக்கள் பயணித்த போதே இந்த நிழற்குடை கட்டப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். பேருந்து போக்குவரத்து என வசதிகள் வந்துவிட்ட நிலையிலும் பழமை மாறாமல் பயணியர் நிழற்கூடத்தை மக்கள் பராமரித்து வருகின்றனர்.