ராமேஸ்வரம், மே 10: ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியில் இரவில் வீசிய பலத்த காற்றால் சவுக்கு மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி செல்லும் வழியில் நடராஜபுரம் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதியையொட்டி வனத்துறைக்குச் சொந்தமான சவுக்கு காடு உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில் பெரிய சவுக்கு மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. இதில் நாகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டின் மீதும் சவுக்கு மரக்கிளைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. வீட்டில் குடியிருந்தவர்கள் காற்றுக்காக வீட்டின் வெளி முற்றத்தில் படுத்திருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.