ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பழைய காவல் நிலையம் அருகே சிடிஎச் சாலையில் சிவசுப்பிரமணியம் என்ற வாசு (58) என்பவருக்கு சொந்தமாக 23 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி இருந்தனர். இதுகுறித்து வாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடர்ந்தார். எனவே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் அங்கு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு அளித்தனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களை போலீசார் கைது செய்தனர்.