ஆவடி: ஆவடி, பட்டாபிராம் சார்லஸ் நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் ராணி (66). ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ஓய்வு பெற்ற அதிகாரி. கடந்த மாதம் 27ம் தேதி ராணி வீட்டு வாசல் முன்பு நின்றிருந்தபோது பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த ஆசாமி திடீரென ராணி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமியை தேடி வந்தனர். போலீசார் விசாரித்தபோது, செயின் பறித்தவர் அண்ணாநகர் மேற்கு, சாந்தோம் காலனி, 1வது தெருவை சேர்ந்த ஜார்ஜ் என்ற செல்வராஜ் (57) என்பதும், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ என்பதும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.