குளித்தலை, மே 8: தமிழகத்தில் விவசாய உற்பத்திக்கு தேவையான நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலை நிலவி வருகின்றது. இருப்பில் உள்ள நீர்ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிக்க தமிழக அரசின் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர்பாசனம், தெளிப்பு நீர்பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசன முறைகளுக்கு தேவையான உபகரணங்கள் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை தாலுகா ரணியமங்கலம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் வேளாண்மை இயக்குநர் (பணிமேலாண்மை) விஜயராணி ஆய்வு செய்தார். அப்போது நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் கருவிகள் பராமரிக்கும் முறைகள் குறித்து கூறினார்.