தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, மே 8: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுச்சாலை அருகில் தனியார் மின் உற்பத்தி செய்வதற்கான உதிரிபாகம் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒன்றரை டன் இரும்பு திருடு போனதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கவரைப்பேட்டை போலீசார் தச்சூர் கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஞ்செட்டி பகுதியை சேர்ந்த ராபர்ட் (20). என்பவரை சோதனை செய்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரை  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் தொழிற்சாலையில் ஒன்றரை டன் இரும்பு கடத்தியவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: