குடிநீர் வசதி இல்லாத ஆவடி பஸ்நிலையம்

ஆவடி, மே 8:   ஆவடி பஸ் நிலையத்தில் பல ஆண்டாக  குடிநீர் வசதியில்லை. இதனால், சுட்டெரிக்கும் வெயிலால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தை ஆவடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என  ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ஆவடி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி அறவே செய்யப்படவில்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் பயணிகள் தாகத்தால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடியில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம்,  ரயில் நிலையம், டிக்கெட் முன்பதிவு மையம்,  கருவூலம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், உதவி கமிஷனர் அலுவலகம், ஆவடி காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, ராணுவத்துறை நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிக்கூடங்கள் ஆகியவை உள்ளன.

மேற்கண்ட அலுவலங்களுக்கு சென்று வர பெரும்பாலோனோர் ஆவடி பஸ் நிலையம் வருகின்றனர். மேலும், இங்கிருந்து திருமுல்லைவாயல் தொழிற்பேட்டை, கோவில்பாதாகை, கன்னடபாளையம், வெள்ளானூர்,  மோரை, வீராபுரம், மேல்பாக்கம், பாண்டேஸ்வரம், கர்லபாக்கம், கதவூர், கன்னியம்மன் நகர், பூச்சி அத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கும் பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். கடந்த ஒரு மாதமாக வாட்டிவதைக்கும் வெயிலால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களில் சிலர் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். பெரும்பாலானோர் குடிநீரின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கடுமையான வெயிலில்  கால் கடுக்க நின்று தாகத்தால் மயங்கி விழும் அவல நிலையும் உள்ளது. இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் ஆவடி நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் வைப்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பயணிகள் குடிநீர் இன்றி தாகத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து ஆவடி  பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Related Stories: