நாகர்கோவில், மே 8: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 26 சுற்றுகளாக எண்ணப்படும் என அதிகாரிகள் கூறினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 23ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் அதிக வாக்குப்பதிவு சதவீதம் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன குளச்சல் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 25 சுற்றுகளாகவும், நாகர்கோவில், பத்மநாபபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. விளவங்கோடு தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளாகவும், கிள்ளியூர் தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. 10 ேமஜைகள் வீதம் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.