ராமநாதபுரம், மே.7: திருவாடானை பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மனுவில், திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சி தாமோதரன்பட்டிணம் கிராமம் மீனவர்கள் வாழும் பகுதியாக உள்ளது. குறிப்பிட்ட சிலரின் லாப நோக்கத்திற்காக கிராமமே அழியும் நிலை உள்ளது. அனுமதியின்றி இங்குள்ள இறால் பண்ணைகளால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றநோய் பரவி மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இறால் பண்ணை செயல்படுவதால் ஒட்டுமொத்த கிராமமும் உயிருடன் கொல்வதற்கு சமமாகும். இறால் பண்ணை கழிவுகளாலும், இறால் குஞ்சுகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் நிலத்தடி நீரை மாசு படுத்துகிறது. அரசு இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தும் உள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி தாமதப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.