பேராவூரணி, மே 3: காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை விரைந்து துவங்க வேண்டுமென பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை முறையாக ரயில் சேவை துவங்கப்படாததால் இப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான 76 கி.மீ தூரத்தில் முதல்கட்ட அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ரயில்வே உயர் அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து வலியுறுத்திய நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே திங்கள், வியாழன் என வாரம் 2 நாட்கள் டெமோ ரயில் சேவை நடந்தது. மீதமிருந்த பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அதிவேக ரயில் சோதனை நடத்தி காரைக்குடி- திருவாரூர் இடையே ரயிலை இயக்கலாம் என அனுமதி வழங்கினார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக டெமோ ரயிலும் இயக்கப்படாமல் உள்ளது.