மாமல்லபுரம் சவுக்குத்தோப்பில் பயங்கரம் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

சென்னை, மே 3: சென்னை, கொட்டிவாக்கத்தை சேர்ந்த வாலிபர் மாமல்லபுரம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை தெற்குப்பட்டு பகுதியில் கடற்கரையையொட்டி சவுக்குத்தோப்பு உள்ளது. இந்த சவுக்குத் தோப்புக்குள் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஐ திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கை, கால், முகம், வயிறு உள்பட 10க்கு மேற்பட்ட இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் சென்னை கொட்டிவாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெகன் (36) என தெரிந்தது. மேலும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும், அதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: