சோளிங்கர், மே1: சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மற்றொரு வாலிபர் கவலைக்கிடமாக உள்ளார்.வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சசிகுமார்(33). இவருக்கு சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்(21) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பட்டாசு வெடி மருந்துகளை குடோனில் இறக்குவதற்காக சரவணன் சென்றார்.அப்போது அவரது நண்பர் சதீஷ்(16) என்பவரை உதவிக்காக அழைத்துச் சென்றார். இருவரும் பட்டாசு வெடி மருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் வெடி மருந்துபெட்டியை வேகமாக வைத்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட உராய்வில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அருகிலிருந்த சரவணன் படுகாயம் அடைந்தார்.