பொள்ளாச்சி, ஏப்.25: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர் ஆற்றோரம் உள்ள பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். இந்த இடங்களில் பயணிகள் குளிக்க தடை உள்ளது. ஆனால் ஆர்வம் மிகுதியால், சில சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆழமான பகுதி மற்றும் மணல் நிறைந்த சேற்று பகுதியில் குளிப்பதால், சிலநேரத்தில் உயிர்பலி ஏற்படுகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், ஆழியார் அணைக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், தடை செய்யப்பட்ட பகுதி என்று தெரியாமல் ஆழியாற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர். சிலர் ஆழமான பகுதிக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். தற்போது அணையில் நீர் மட்டம் சுமார் 63அடியாக உள்ளது. இருப்பினும் நீர்நிலையை பார்த்த ஆனந்தத்தில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் போகிறது.