திருத்துறைப்பூண்டி, ஏப். 24: திருத்துறைப்பூண்டி அருகே அம்பலத்தோப்பில் நெற்களம் அமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் ஓவர்குடி சாலையில் அம்பலத்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தபணி திடீரென்று மூன்று மாத காலமாக பாதியில் நின்று விட்டது. ஏற்கனவே நடைபெற்ற பணியில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சிறிய பணி என்பதால் ஒன்றிய அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுத்து சென்று பார்ப்பதில்லை. இதனால் பணியின் தரம் குறைவாகி வருகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பாதியில் நின்ற நெற்களம் பணியினை விரைந்து முடித்திட வேண்டுமென்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.