ராமநாதபுரம், ஏப்.24: சிறப்பு நிலை நகராட்சிக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் பழைய முறையிலேயே வரி வசூல் நடைபெறும் என ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. கடந்த ஆண்டு முதல் வீட்டு வரி, தொழில்வரி மற்றும் காலி இடங்களுக்கான வரிகள் 50% கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி வரி வருவாய் வரவேண்டிய நிலையில் கடந்தாண்டு 50% அளவிலேயே வரி வசூலாகியுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போதைய நகராட்சியுடன் அருகில் உள்ள சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளனர். நகராட்சியை விட ஊராட்சிகளில் குறைவான வரி கட்டணம் செலுத்திவந்துள்ளனர். நகரின் எல்லை விரிவுபடுத்தப்படும் நிலையில் வரிவசூலில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.