திருமங்கலம், ஏப். 24: மதுரை பெரியாரிலிருந்து கிண்ணிமங்கலம் கிராமத்திற்கு இயக்கப்பட்ட டவுன்பஸ் கடந்த 6 மாதமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கிண்ணிமங்கலம் ஊராட்சி. சுமார் 2 ஆயிரம் பேருக்கும் மேல் வசிக்கும் இந்த கிராமத்திற்கு மதுரை பெரியார் நிலையத்திலிருந்து தினசரி டவுன்பஸ் இயக்கப்பட்டது. அரசரடி, நாகமலை, பல்கலைகழகம், செக்காணூரணி வழியாக விடப்பட்ட இந்த டவுன்பஸ்ஸை நம்பி கிண்ணிமங்கலம், அடுத்துள்ள மாவிலிபட்டி உள்ளிட்ட கிராமமக்கள் பயன்அடைந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென கிண்ணிமங்கலத்திற்கு இயக்கப்பட்ட டவுன்பஸ் நிறுத்தப்பட்டது. இந்த பஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கிண்ணிமங்கலம் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தங்களது கிராமத்திலிருந்து செக்காணூரணி சென்று மதுரைக்கு டவுன்பஸ் மாறுகின்றனர். இதற்காக ஷேர் ஆட்டோவை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து கிண்ணிமங்கலம் பொதுமக்கள் கூறுகையில், ‘செக்காணூரணி டிப்போ திறக்கப்பட்டவுன் சுற்றுவட்டார கிராம பகுதியில் கூடுதல் டவுன்பஸ்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட எங்கள் கிராமத்து பஸ்ஸை நிறுத்திவிட்டனர். இது வேதனையளிக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்றனர்.