சேதுபாவாசத்திரம், ஏப். 24: மீன்பிடி தடைகாலத்தையொட்டி சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மீனவர்களுக்கு தங்களது உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது. வழக்கம்போல் இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி தடைகாலம் துவங்கி இன்றுடன் 9 நாட்களுக்கு மேலாகிறது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் ஆண்டுதோறும் தடைகாலம் தவிர்த்து இடைவெளியின்றி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.தவிர்க்க முடியாத காரணங்களால் வேலை நிறுத்தமோ, போராட்டங்களோ அறிவித்தால் தான் ஒரு சில நாட்கள் மட்டும் மீன்பிடி தொழில் தடைபடும். இந்த நேரத்தில் படகுகளையோ, வலைகளையோ மற்றும் மற்ற உபகரணங்களையோ சீரமைப்பு செய்வது முடியாத காரியம். எனவே அரசு அறிவிக்கக்கூடிய தடைகாலத்தை பயன்படுத்தி படகு, வலை மற்றும் உபகரணங்களை பழுதுபார்ப்பது தான் மீனவர்களின் வழக்கம்.