துறையூர், ஏப்.23: துறையூர் அருகே ஒட்டம்பட்டி- நரசிங்கபுரம் சாலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியிலிருந்து நரசிங்கபுரம் செல்லும் வழியில் பாலம் உள்ளது. இந்த பாலம் காணப்பாடி ஆற்றில் 2 வருடத்திற்கு முன்பு காட்டாற்று வெள்ளப்பெருக்கால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் இதுவரை பாலம் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வகமோ, ஊராட்சி நிர்வாகமோ கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. துறையூரிலிருந்து 10க்கு மேற்பட்ட பள்ளி பேருந்துகள் , ஒட்டம்பட்டி வழியாக நரசிங்கபுரம், பெருமாள்பாளையம் வழியாக துறையூருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் செல்வார்கள். இந்த பாலம் உடைந்ததிலிருந்து 5 கீ.மீ தூரம் சுற்றி செல்லவேண்டும் என பல கோரிக்கை வைத்து மனுக்கள் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.