மின்விளக்குகள், இரும்பு கேட்டுகள் உடைப்பு சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கிய கல்லணை கால்வாய் கரை நடைபாதை நடவடிக்கை எடுக்குமா காவல்துறை

தஞ்சை, ஏப். 23: தஞ்சை கல்லணை கால்வாய் கரை நடைபாதை சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லணை கால்வாய் ஆற்று பாலம் முதல் (தாசில்தார் அலுவலகம் பின்புற பகுதி) இர்வின் பாலம் வரை ஆற்றின் இருகரைகளிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 540 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலத்துடன் டைல்ஸ் பதிக்கப்பட்டு பக்கவாட்டில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே அமர்ந்து சற்று ஓய்வெடுக்க சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் இவை அனைத்தும் ரூ.1.28 கோடி மதிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன.

ஆனால் நடைபாதை அமைக்கப்பட்ட ஓராண்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக சமூக விரோதிகளின் புகலிடமாக நடைபாதை மாறிபோனது. இரவு மட்டுமின்றி பகலிலும் திறந்தவெளி பாராக நடைபாதையை மாற்றிவிட்டனர். அத்துடன் மதுபாட்டில்களை நடைபாதையில் போட்டு உடைத்து விட்டு செல்வதால் நடைபாதை முழுவதும் பாட்டில் துண்டுகள் சிதறி கிடக்கிறது. இதனால் நடைபயிற்சிக்கு வருவோர் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தாசில்தார் அலுவலகத்தில் இரவுநேர காவலர் பணியில் இல்லாததால் பின்புறம் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள், சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. அதேபோல் அரசு சுற்றுலா மாளிகை எதிரே உள்ள ஆற்றங்கரையின் எதிர்ப்புறம் மின்விளக்குகளை சமூக விரோதிகள் உடைத்து விட்டதால் இருளில் மூழ்கியுள்ளது.

நடைபாதை முழுவதும் ஆங்காங்கு சமூக விரோதிகள் கற்களை கொண்டு மின்விளக்குகளை உடைத்துள்ளனர். இதனால் பல இடங்கள் இருளில் உள்ளது. மேலும் ஆற்று பாலத்தின் தெற்குகரை நடைபாதை நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டுகளும் ஆங்காங்கே உடைக்கப்பட்டுள்ளன. அந்திசாயும் மாலை மற்றும் இருள் பரவும் நேரங்களில் நகரவாசிகள், பெண்கள் நடைபயிற்சி செய்யும் நோக்கத்தில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் முற்றிலும் சிதைந்து போய்விட்டதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தஞ்சை மேற்கு மற்றும் கிழக்கு போலீசார் இந்த நடைபாதையில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்தும் வகையில் மாலை முதல் இரவு வரை இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: